025.ரசித்தவைகள்:

வறுமையை சுமக்க முடியாததால்
வந்தவனையெல்லாம் சுமக்கிறாள்
விலைமாது!

=======================

ஊரடங்கு உத்திரவு
நடு வீதியில்
வாலை ஆட்டிக்கொண்டு நாய்!

=======================

உலகிற்கே
அகிம்சையைப் போதித்தார்
கையில் தடியுடன்…!

=======================

 ”நீ போகும் பாதையில் எவ்வித தடங்கலும் இல்லையென்றால் அது உன் பாதை அல்ல….
யாரோ கடந்து போன பாதை… “
**************************

கிராமம் – நகரம் – குழந்தை

வண்ணத்துப் பூச்சி
தட்டான்
பொன் வண்டு
எதுவும் பார்த்ததில்லை
என் குழந்தை
கொசுவைத் தவிர. . .

திருடன் போலிஸ்
அம்மா அப்பா
கண்ணா மூச்சு
எதுவும் விளையாடத் தெரியாத
என் குழந்தை
கம்ப்யூட்டரில்
கார் ரேஸிங்கில். . .

சுடும் மணல் நதி
மதிய நேரப்பாறை
எதிலும் பாதம் பட்டு
சூடுபடாத என் குழந்தை
கட்ஷுக்குள்
வெந்து போனது

முருங்கை மரம் ஏறி விழுந்து
கை ஒடிந்தவன்
மறுநாள்
மாவுக் கட்டுடன் பள்ளிக்கூடத்தில்

பாத் ரூமில்
வழுக்கி விழுந்த
என் குழந்தை
பெட்ரெஸ்டில் பத்து நாள்

—நகரத்தில்
எல்லா வசதியுடன்
வாழ்கிறது என் குழந்தை
வாழ்க்கையைத் தவிர. . .

**************************

தெய்வ தரிசனம்

கோவிலில்
குரங்கைக் காட்டி
யானையைக் காட்டி
அழும் குழந்தையை
பயப்படுத்திக் கொண்டிருந்தார் அப்பா!
அழுகையை நிறுத்துவதற்காக…

ஒரு வழியாக
வரிசையில் நின்று
கடவுளை தரிசிக்கையில்
அப்பா பயந்துகொண்டு
கும்பிடுகையில்
குழந்தை
சிரித்துக் கொண்டிருந்தது…

============================================



ஐந்து கிலோ அரிசி ,
இரண்டு லிட்டர் மண்ணெண்ணெய் ,
மூன்று கிலோ காய்கறி ,
சமைக்க அடுப்பு,
இவை அனைத்தும் இருந்தும்
போக்க முடிய வில்லை
என் இரண்டு மாத குழந்தையின் பசியை...

 

 

புலி பசித்தாலும்

இனபேதம் கூடாது எனப்பேசும் பெரியோரே
இலங்கையிலே நடப்பது என்னவாம்?
தினவோடு திமிர்கொண்டு திரிகின்ற சிங்களரின்
தீர்மானம் கொலைவெறி அல்லவா?
மனவேறு பாடங்கு மாத்தமிழர் மேல்கொண்டு
மாய்க்கின்ற போக்கென்ன நியாயமா?
சினவேங்கைக் கூட்டங்கள் இடும்பரை எதிர்கொள்ளச்
சீறினால் அதுமட்டும் குற்றமா?

பிரிவினை கூடாது எனப்பேசும் பெரியோரே
பிரித்தாளும் போக்கங்கு இல்லையா?
நரிமனச் சிங்களத் தலைவர்கள் தமிழ்மக்கள்
உரிமைக்கு உலைவைக்க வில்லையா?
சரிநிகர் மனிதராய்த் தமிழரை நடத்தினால்
சமரங்கு இதுவரையில் நீளுமா?
எரிநிகர் புலிகளும் எதிரியின் படைகளும்
எந்நாளும் போராடி மாளுமா?

மோப்பத்தைப் பிடித்திங்கு வாக்கு வங்கியில்
மூழ்குதல் தமிழ்த்தலைவர் வாடிக்கை
ஏப்பத்தை விடுமளவு எல்லாம் விழுங்குதல்
இந்தியத் தலைவர்கள் வேடிக்கை
ஆப்பத்தைப் பங்கிடும் அரசியல் குரங்குகள்
ஆதரவைப் புலிஇனம் நாடுமா?
மாப்பற்றை மண்மீது வைத்தபின் தமிழ்ஈழம்
மலராமல் தம்கண்ணை மூடுமா?


பின்னூட்டமொன்றை இடுக